உ
சிவமயம்
தில்லையில் அருளிய
2. கீர்த்தித் திருஅகவல்
சிவனது திருவருள் புகழ்ச்சி முறைமை
[சிவபெருமான் தன்னுடைய அடியார்களை உய்விக்கும் பொருட்டு நிகழ்த்திய பல்வேறு திருவிளையாடல்களைப் பேசும் பகுதி]
நிலைமண்டில ஆசிரியப்பா
2.
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
என்னுடை இருளை ஏறத் துறந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
அருஞ்சொற்பொருள்:
மூதூர் - பழமையான ஊர். இருள் - ஆணவ மலம். ஏற - முற்றிலும். மீதூர - மிகுமாறு.
பொழிப்புரை:
தில்லை எனப்படும் பழமையான ஊரில் நடனம் ஆடிய திருவடியைப் பல உயிர்களில் பலமுறையும் பொருந்துமாறு செய்தவன். எண்ணற்ற மேலான பல குணங்களாக அழகுற விளங்குபவன். மண் உலகிலும் விண் உலகிலும் தேவர் உலகிலும் பல்வேறு கல்வியும் கலைகளும் தோன்றுமாறும் அழியுமாறும் செய்தவன். என்னைப் பற்றி இருந்த ஆணவ மல இருட்டை முற்றிலுமாக விலகுமாறு செய்தவன். தன்னுடைய அடியார்களின் உள்ளங்கள் அனைத்திலும் அன்பு மிகுமாறு செய்வதையே கொள்கையாகவும் சிறப்பாகவும் கொண்டவன்.
No comments:
Post a Comment