Friday, January 19, 2018

கீர்த்தித் திருஅகவல் (9-18)

மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தொற்றுவித்து அருளியும்
கல்லா டத்துக் கலந்துஇனிது அருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்னருள் விளைத்தும்
கிராது வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நல்தடம் படிந்தும்
கேவேடர் ஆகிக் கெளிறுஅது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்


அருஞ்சொற்பொருள்:

மகேந்திரம் - ஒரு மலை. கல்லாடம் - ஒரு தலம். நயப்பு - இனிமை. உறவு - நட்பு. பஞ்சப்பள்ளி - ஒரு தலம். பால்மொழி - பால் போன்ற இனிமையான மொழியை உடைய உமை. கிராதன் - வேடன். கிஞ்சுக வாய் - முள்முருக்கம் பூப்போன்ற சிவந்த வாய். கொங்கை - மலை. நல் தடம் - நல்ல நீர் நிலை. கேவேடர் - மீன் வலையன். கெளிறு - ஒரு வகை மீன். மாவேட்டு - பெரிய வேட்டை.

பொழிப்புரை:
ஏற்கனவே தாம் அருளிய ஆகமங்களை மகேந்திர மலையில் தோன்றுமாறு செய்தவன். கல்லாடம் என்னும் தலத்தில் அடியார்களுக்கு இனிதே அருள்பாலிக்கும் நன்மைகள் பொருந்திய உமாதேவியோடு நட்பு கொண்டவன். பஞ்சப்பள்ளி என்னும் தலத்தில் பால்போன்ற இனிய மொழி பேசும் உமையோடு கூடி இருந்து வேடனாகத் தோன்றி முள்முருக்கம் பூப்போன்ற சிவந்த வாயினை உடைய உமையோடு நெருங்கி இருந்து ஞானத்தை வழங்கும் பாலைத் தன்னகத்தே கொண்ட முலையாகிய நல்ல நீர்நிலையில் நீராடியவன். மீனவன் வேடம் தாங்கி கெளிறு என்னும் மீனைப் பிடித்து அதனிடம் இருந்த ஆகமங்களை மீட்டவன்.

No comments:

Post a Comment

கீர்த்தித் திருஅகவல் (19-26)

மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து உற்றஐம் முகங்க ளால்பணித்து அருளியும் நந்தம் பாடியில் நான்மறை யோனாய் அந்தமில் ஆரிய னாய்அமர்ந்து அருளியு...